ஈ . உறவு...
1.தங்கைக்காக
அண்ணன் எந்தன் கோவிலிலே
அணையாத தீபம் என் தங்கை
அந்த தீபத்தை ஏற்றி வைப்பேன்
எழிலுடனே விளங்கச் செய்வேன்.
எனக்கென்று வாழ்வில்லை - என்
தங்கைக்காக வாழ்கின்றேன்
அவள் வாழ்வை வளமாக்க
கற்பனையில் மிதக்கின்றேன்.
கற்பனையில் கண்டவர்கள் -தங்கைக்கு
காரியமாய் நடக்க வேண்டும்
காலமெல்லாம் அதற்காக
கழிந்தாலும் கவலையில்லை.
வரன் பெற்று வளமும் பெற்று - அவள்
வாழ்வெல்லாம் களிக்க வேண்டும்
மக்கள் பெற்று மனம் நிறைந்து
மகராணியாய் விளங்க வேண்டும்.
- 27.02.1980
2. கவிதைக்கு வளம்
தனிப்பாசம் தருவதற்கோர்
தங்கை வேண்டும் என்றிருந்தேன்
பிறந்துவிட்டாள் தங்கையவள்
இருபதாண்டு முன் இதே நாளில்.
சிறந்த நாள் தங்கை பிறந்த நாள்
பறந்து வந்தது அந்த விருந்து நாள்
மயங்க வைத்தாள் மழலை பேசி
தயங்க வைத்தாள் மழலை பேசி
விளங்கச்செய்தாள் அன்பெதென
வழங்கச்செய்தாள் பாசமெல்லாம்.
வளர்ந்தனள் அவள் படர்ந்தனள்
வளர்மதிபோல் வான்முல்லைபோல்
களித்தனர் கண்டுகளித்தனர் -அவள்
அழகினை கண்டு களித்தனர்.
வளர்த்துவிட்டாள் என் கற்பனையை
வளமிட்டாள் என் கவிதைக்கு
தூண்டிவிட்டாள் எம் கடமைகளை
துளங்கச்செய்வாள் எம் குலப்பெயரை.
[தங்கையின் பிறந்தநாள் -04.06.1980]
3. தம்பித்துரை
உடன்பிறப்பு இல்லாமல் தவித்திருந்தேன்
உதயமானான் தம்பியவன் தனிமை போக்க
இன்றைக்கு இருபத்து மூன்றாண்டு முன்னாலே
இகம் வந்தான் இளையவன் ஜாண்றோஸ்.
பிறந்தநாள் இன்று அவன் பிறந்தநாள்
வந்தநாள் புகழ் எமக்கு வந்த நாள்.
அவன் வளர்ந்தான் அறிவும் வளர்த்தான்
ஆற்றலும் அடக்கமும் சேர்த்தே பெற்றான்
ஊமைத்துரை உற்றார் உறவினர்க்கு
தம்பித்துரை அவன் எனக்கென்றும்.
பொறுமைக்கு பாறையை விட மேலாவான்
பொங்கியெழ அலைக்கடலைப் போலாவான்
ஆடம் பிடிப்பான் அழவே மாட்டான்
அமைதியுடன் தோன்றி நிற்பான்.
தமிழ்க் கலையோடு காதலையும் போற்றிடுவான்
தமைக்காத்து நடக்கவேணும் பெண்களென்பான்
தன்மானம் தமிழனுக்கு வேணுமென்பான் -அதை
தன வாழ்வில் வளர்த்திடவே செயல்படுவான் .
- தம்பியின் பிறந்தநாள் 11.06.1980
4. சின்ன ஆசை
சின்ன வயதில் ஒரு சின்ன ஆசை
குடும்பம் வேண்டாம் குருவாக வேண்டும்
சின்ன வயது சீக்கிரம் முடிந்து
பெரியவனாகி பள்ளிக்கூடம் விட்டேன்
குருமடம் செல்ல குருவிடம் சென்றேன்
சரியென சொன்னார் சாமியார் அன்று
அரண்மனை சென்றேன் ஆயரைக் காண
அவரும் அழைத்தார் அன்புடனேயே
குருமடம் புகுந்தேன் நற்குணம் கற்றேன்
குறைகளை களைந்தேன் குருவாக மாற.
- ஜூலை 1980
5. தாயும் தங்கையும்
அண்ணன் எந்தன் கோவிலிலே
அணையாத தீபம் என் தங்கை
கோவிலை எழுப்பியதும் அம்மா அப்பா
தீபத்தை ஏற்றியதும் அவர்களன்றோ
தங்கை வேண்டும் என்பதற்கு
தாய் வேண்டாம் என்றில்லை
தங்கைக்குமேல் என்றும்
தங்கை தந்த தாயன்றோ.
படிக்கவைத்த பாமரப் பெற்றோரை
பரிகசிப்பது பண்பாடா !
No comments:
Post a Comment