5.3.’25:
வாழ்த்துரை
அருட்பணி(யாளர்) பங்கிராஸ்
அருளப்பன் அவர்களின் கவிதைகள் அனைத்தையும் ஒன்றும் விடாமல் வாசித்தேன். மிக சிறந்த
கருத்துகளை அனைவரும் புரியும் விதத்தில் எளிய நடையில் கவிதைகளாக பதிவு
செய்திருப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்நூலின் எல்லா கவிதைகளும் என் நெஞ்சை
தொட்டது.
எத்தனையோ
ஆண்டுகள் கடந்த பின்னரும் தனது முதல் நூலை வெளியிடுகையில் தமிழ் ஆசிரியராகிய என்னை
நினைவில் வைத்து வாழ்த்துரை எழுதக் கேட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். அந்த மறவா
நெஞ்சை குருத்துவக் காணிக்கை எனும் கவிதையில்...
"அப்ப இரசத்துடன் என் தாய் தந்தை
தம்பி தங்கையையும் அளிக்கின்றேன்
உற்றார் உறவினர் நண்பருடன்
இப்பங்கையும் உமக்களிக்கின்றேன்.
இந்நிலைக்கென்னை சேர்த்திட உதவிய
அத்தனை பேரையும் நினைக்கின்றேன்"
என்ற வரிகளிலும்
உணர முடிந்தது. உயரிய நிலை அடைந்துவிட்டாலோ அல்லது நாட்கள் கடந்து விட்டாலோ பலரிடம்
இல்லாமல் போகிற பண்பு இது.
'சின்னப்பரின்
மனம் திரும்புதல்' எனும் கவிதை சவுல் பவுலான வரலாற்றை மிக
எளிமையாக பாமரனும் (பண்டிதனும்) புரியும் படியாக எழுதியுள்ளார். அது போலவே 'நண்பர் இயேசு' கவிதையில் இயேசுவை நண்பராக காட்டி
இயேசுவின் தோட்டத்தில் ஒன்றாக உழைக்க அழைக்கும் வரிகள் மிகச் சிறப்பு. 'ஆண்டவனைத் தேடி' எனும் கவிதை பங்கிராஸ் அவர்களின்
மாற்றுச் சிந்தனைக்கு நல்லதொரு உதாரணம் என்றே கூறலாம்.
விழிப்புணர்வு
பகுதியில் வரும்
'விழித்தெழு
மீனவனே' கவிதையில் மீனவனின் நிலை இயல்பாக
சித்தரிக்கப் பட்டுள்ளது. மீனவ சமூகத்தின் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறையை
அக்கவிதை நமக்கு உணர்த்துகிறது. இதுபோலவே பல கவிதைகள் எழுச்சியூட்டுபவையாக உள்ளது.
உறவுகளைக் குறித்து
எழுதிய கவிதைகளும் மிகைப்படுத்தலின்றி இயல்பாக உள்ளது. சரியோ தவறோ... தனக்கு
சரியெனப் பட்டதை (அனைவரது முன்னிலையில்) தனக்கே உரிய பாணியில் கவிதை வடிவில்
வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுதலுக்குரியது.
இந்நூல் வாயிலாக
பல்வேறு சமூக சிந்தனைகளை நம்மில் விதைக்கின்றார்.
மட்டுமின்றி,
நம்மை சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுகிறார்.
படைப்பாற்றலோடு கூடிய தலைமைப் பண்பும் ஆளுமையும் இவரது கவிதை வரிகளில் அறிய
முடிகிறது.
கவிஞரின் கவிதை
நயம் நூலுக்கு அழகுக்கு அழகு சேர்க்கிறது. இவரது எழுதுகோலின் பணி தொடரவேண்டும்,
சமூக மாற்றத்துக்கான நூல்கள் பல வெளியிட
வேண்டுமென மனதார வாழ்த்துகிறேன்!
- சேவியர்
பாஸ்டின்,
தமிழ் ஆசிரியர்
(ஓய்வு)
சின்னத்துறை.
09.03.2015
வாழ்த்துரை...
கவிதை என்பது வெறும் சொற்களின் கூடாரம் அல்ல, உணர்வின் வெளிப்பாடு, வாழ்வின் எதிரொலி. இந்த கவிதைகள் அன்றாட வாழ்க்கையின் நுணுக்கங்களை, மனித உணர்வுகளின் பரிமாணங்களை அழகாக பதிவு செய்யும் ஒரு வசீகரப் பிரதேசமாக விளங்குகிறது.
இயேசுவின் அருள்பொழிய இறைவனின் கருணை, அன்பு, கொடை ஆகியவற்றை தத்துவ ரீதியாகவும் பக்தி உணர்வோடும் விளக்கும் கவிதைகள்... அவரது பரிபூரண அன்பில் மகிழும் வழிகளை எடுத்துரைத்து, அதில் நிலைக்க வழிகாட்டுகிறது… இசையின் மூலம் பக்தி உணர்வை எழுப்பி செவியினும் உள்ளத்தினும் இறைநேசம் மலரச் செய்யத் தகுந்த ஆன்மீக கவிதை வரிகளை உள்ளடக்கியது...
மேலும், உயிர்கள் அனைத்திற்கும் ஆதாரமான பாசத்தின் பரிமளம் தாயின் இதழில் தொடங்கும் முதல் முத்தமாக, உலகத்தையே அரவணைக்கும் தியாகமாக விளங்கும் மந்திரம்... உணர்ச்சியைக் கவிதையாக்கும் எழுத்து.
தமிழனின் உயிரோட்டம், உரிமையும் பெருமையும் தழைத்தாடும் செம்மொழியின் கரம் பிடித்த இசைமொழி… கனிந்த காதல்... உலகத்தை ஒருங்கிணைக்கும் ஆற்றல், இருவரின் இதயங்களை ஒன்றாக்கும் அமுதம், பகிர்ந்தளிக்கும் பரிவு, மௌனத்தில் உரையாடும் உணர்வு, பிரிந்தாலும் பின்னிப் போன உறவு, எதிர்முகங்களில் இருந்தும் இணையும் ஒற்றுமை இங்கு உணரலாம்.
வாழ்க்கையின் சமச்சீரான அழகை எடுத்துக்காட்டும் சமநிலை... தன்னுள் துவங்கி, தன் கனவுகளை சுமந்துசெல்லும் இனிய எதிர்காலம்… தன் அடையாளம், தன் பாரம்பரியம், தன் வாழ்வின் தொடர்ச்சி, என கவிதைகள் தொடர்ந்து கொண்டே செல்கிறது..
வாசிக்க வாசிக்க... கவிதை வரிகள் இனிமையை தந்து கொண்டே செல்கிறது...
வாசித்த கணமே வழி தேடி,
இதயத்தோடு எங்கும் செல்கின்றேன்.
இந்த நூல் பேசும் நேர்த்தியைக்,
பிறருக்கு சொல்லாமல் இருக்கமுடியுமா?
கவிதை வார்த்தையில் செதுக்கிய கோயில்… நூலின் எழுச்சி எல்லோருக்கும் இன்பம்… உங்கள் எழுத்து என்றும் நிலைத்திட வாழ்த்துகள்!
இந்த நூல் பலரின் உள்ளத்தைக் தொட, அவர்களின் அனுபவங்களை பிரதிபலிக்க, உந்துவதாய் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன். உங்கள் எழுத்துக்கள் இன்னும் பலரின் இதயத்தில் இடம் பிடிக்க, மேலும் பல படைப்புகளை உருவாக்க உங்கள் இலக்கியப் பணி ஓயாமல் தொடர, என் மனமார்ந்த வாழ்த்துகள்!
வாழ்க எழுத்தின் வழி,
விரிந்திட வாழ்வின் வெளிச்சம்!
- அன்புடன்,
முனைவர் சி. ஆன்சிமோள்,
[தமிழ்த்துறைத் தலைவர் (சுயநிதி)
ஹோலி கிராஸ் கல்லூரி (தன்னாட்சி)
நாகர்கோவில்]
10.03.2025
அணிந்துரை :
இறைவனைப் பாடும் இறவா கவிதைகள்!
- குமரி ஆதவன்
“காகிதத்தை பார்த்தால் கழுதை சாப்பிடும்; கவிஞன் கவிதை எழுதுவான்” என்பார் வலம்புரி ஜாண் அவர்கள். அருட்பணி(யாளர்) பங்கிராஸ் அருளப்பன் அவர்களுக்கு காகிதத்தை பார்த்ததும் கவிதை எழுதத் தோன்றியிருக்கிறது. பெரும்பாலும் கவிஞர்களுக்கு கவிதை காதலில் இருந்துதான் புறப்படும். இவருக்கோ கவிதை ஆன்மிகத்தில் இருந்து பிறப்பெடுத்திருக்கிறது. தன்னை கடவுளுக்குத் தற்கையளிப்பு செய்த ஒருவர், கடவுளின் மீது காதல் கொண்டிருக்கிறார். ஆண்டாளைப் போல் கடவுள் மீது காதல் கொண்டு பெரும்பான்மைக் கவிதைகளைத் தந்திருக்கிறார்.
தான் சார்ந்திருக்கும் கிறிஸ்தவ சமய ஆன்மிகத்தை முன்வைக்கும் இவர், இந்தச் சமயத்தின் சாலை வழியாகச் சென்று, இறைவனை அடையும் வழியை கவிதை மூலம் விவரிக்கிறார். இயேசுநாதரை அகம் மகிழ ஆராதிக்கிறார்; இயேசுவின் அன்பை, அஹிம்சையை, சமநீதிக் கொள்கையை, மன்னிப்பை, தற்கையளிப்பைப் பல்வேறு கவிதைகள் மூலம் பந்தி வைக்கிறார். ‘உள்ளத்தை கடந்தவன் நீ / உயிராக இருப்பவனும் நீ / உண்மையெல்லாம் நீ / உன்னையன்றி ஊமையே யான்!’ என்கிறார். குறிப்பாக கடவுளை அன்னை மரியாவின் வழி காண அறிவுறுத்துகிறார். அன்னை மரியாள் மீது இவர் கொண்டிருக்கும் ஆழமான பற்றையும் அழுத்தமான நம்பிக்கையையும் இவை வெளிப்படுத்துகின்றன. ‘கடவுளை கல்வடிவில் கோவிலில் கண்டேன் / கனிவுடைய கருணையுள்ளம் அதிலெங்கும் இல்லை/ களைப்புற்று கடைசியாக தாயிடத்தில் வந்தேன் / காத்திருக்கும் கருணையுள்ளம் அவளிடத்தே கண்டேன்!’ என்று மாதாவை பெருமைப்பட கூறுகின்றார்.
இவரது இறைப்பணி திட்டம் சிறுவயதிலேயே உருவாகிவிட்டது என்பதை அவருடைய கவிதை மூலம் தெளிவுபடுத்துகிறார். ‘சின்ன வயதில்/ ஒரு சின்ன ஆசை/ குடும்பம் வேண்டாம் / குருவாக வேண்டும்.’ தன்னுடைய லட்சியம் எதுவென்று இளம் வயதில் கண்டு கொள்ளுகிற ஒரு மனிதன், அவனுடைய வாழ்க்கையில் வெற்றி பெற்று விடுவது எளிதாகி விடுகிறது என்பதற்கு இவரது இறைப்பணி வாழ்வு சான்றாகிறது.
ஆன்மீகத்தில் மூன்று வகை உண்டு. கடவுளை மட்டுமே இறுகப்பற்றிக் கொள்வது முதல் வகை; இவர்கள் வானத்தை நோக்கி பயணிப்பவர்கள். மனிதரில் கடவுளை காண்பது இரண்டாம் வகை; இவர்கள் மண்ணை நோக்கிப் பயணிப்பவர்கள். அகத்தில் கடவுளையும் புறத்தில் மனிதர் மீதான கரிசனையிலும் நிறைவு காண்பது மூன்றாம் வகை; இவர்கள் அதிகாலையிலும் இரவிலும் வானத்தை நோக்கிச் செபிப்பார்கள்; பகலில் மண்ணில் மனிதர்களின் சுக துக்கங்களோடு பயணிப்பார்கள். இந்த அருட்பணியாளரின் எழுத்து இவர் மூன்றாம் வகை ஆன்மீகவாதி என்று அடையாளம் காட்டுகிறது. “நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்” என்பதற்கு ஏற்ப சிலைகளைக் கடந்து அகத்தில் கடவுளைத் தேட அறிவுறுத்துகின்றன இவர் கவிதைகள். ‘மரணம் என்பது ஒரு க(ன) நேரம் /மறுபடி வேதனை தரும் வகையாக / மன்னன் உந்தன் கண்களைக் களைய / மாபரனைக் கண்டாய் அகக் கண்ணாலே!’ என்று தனது மண்ணின் பாதுகாவலியாகிய புனித பிரகாசியம்மாளைக் குறித்து எழுதுகிறார்.
ஆன்மீகத்தின் ஆழத்திற்குள் பயணித்திருக்கும் இவர், இரண்டாம் பாகமாக தந்திருக்கும் கவிதைகள் வழி மனிதர்களின் வலிகளுக்குக் கரம் தருகிறார். தான் சார்ந்த மீன் தொழில் செய்கிற மக்களின் வேதனைப் பாடுகளை கனிவோடு அணுகுகிறார். கடலோடிகளின் தொழில் கடினத்தை, அவர்கள் குடும்பங்களின் வலிகளை, இழப்புகளை, அரசியல்மயமாக மறுக்கின்ற அல்லது மறுக்கப்படுகின்ற சூழலை, இன்றளவும் புரிந்து கொள்ளாத சமூகத்தின் விழிப்புணர்வு இன்மையைக் கரிசனையோடு பதிவு செய்துள்ளார். ‘கடலை மட்டும் நம்பி வாழ்ந்தோம்/ வாழ்வில் கரை இன்னும் சேரவில்லை!’ என்று மீனவர் வாழ்வு மலரவில்லை என்பதைச் சுட்டுகிறார்.
தலைசுமட்டுக்காரியை நாவலாக்கினார் குறும்பனை பெர்லின். சாகரும், சப்திகாவும், செல்வராஜூம் கடலோடிகளின் வலிகளைக் கதையாக்கினார்கள். அருட்பணியாளர் பங்கிராஸ் அருளப்பன் இவர்கள் இரு சாராரின் வலிகளையும் கவிதையாக்கி இருக்கிறார். ‘கொண்டு வந்த மீன்களையே / கொணர்ந்திடுவாய் சந்தைக்கு / தலைச்சுமடாய் தலைதெறிக்க / ஓடிடுவாள் வழியெல்லாம் // நிலமதிலே பிறந்தாலும் / நீர் தானே பிழைப்பெமக்கு / மீன்பிடித்து வாழ்கின்றோம் / மீள இது போதுமென்றோம்?.’இங்கே இவர் புதிய மானுட விடுதலைக் குரலாய் ஒலிக்கிறார். அறிஞர் அண்ணா சொன்னபடி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் முயற்சி இது. ‘ஏழைக்கு வாழ்வில்லை / ஏன் இந்த வழக்கம் இங்கே / பசிப்பவற்கு புசிக்க இல்லை/ இருப்பவருக்கோ பசியில்லை!’ என ஏழையின் பசியையும் பணக்காரர்களின் ருசியையும் பங்கிட்டு கொள்வோம் என்கிறார்.
தன் சமூகத்துக்காக கவிதை பாடியவர் தன் உள்ளத்து உறவாய் உயிராய் கருதும் தாய், தகப்பன், தங்கை, தம்பி ஆகியோர் குறித்தும் அழுத்தமான பாசம் ததும்பம் கவிதைகளைப் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் உச்சம் தொடுவது, ‘பாசமலர்’ போல் ‘தங்கைக்கோர் கீதம்’ போல் தங்கை பாசம் தன் தங்கையை ஒரு தேவதையாகவே பார்க்கிறார்; அவர்கள் குடும்பத்தின் மகிழ்வின் உச்சமாகப் பதிவிடுகிறார். ‘வரம் பெற்று வளமும் பெற்று / வாழ்வெல்லாம் களிக்க வேண்டும் / மக்கள் பெற்று மனம் நிறைந்து / மகாராணியாய் விளங்க வேண்டும்!’ என்று தன் பாசத்தைப் பந்தி வைக்கிறார். முத்துக்கு முத்தாக இருந்த சகோதர பாசம் எல்லாம் சொத்துக்குச் சொத்தாக என்று பணப்படுத்தப்பட்ட இக்காலத்தில் பாசத்தின், உறவின் உன்னதத்தை, ‘துன்பமெல்லாம் தாங்குவதேன் தம்பி மட்டும் /;துணை நின்று தூக்கி விட துணிந்து விட்டேன் / துணை நின்றால் துறவறம் துயர்படுமா? / துயர்நீக்க துறவரத்தை துறக்க நேருமா?’ என்று கவிதையாக்கியுள்ள இவர், நம் இதயத்தில் சிம்மாசனம் இட்டு உட்கார்ந்து விடுகிறார்.
‘நினைவுள்ள நாளெல்லாம் நீங்காத துன்பம் / நித்தமும் நின் கண்ணில் நிலையான துயரம் / நிமித்தமாய் நின்றவர் நிலையில்லா தந்தை / நிழல்போல நின்றாயே நீங்காமல் எம்மை!’ எனத் தன் தாயின் தியாகத்தை எண்ணி பூரித்து போய் எழுதுகிறார். தாயின் வேதனைக்கும் வலிக்கும் என்ன காரணம் என்பதையும் இக் கவிதை நூலிலே அவர் பதிவு செய்கிறார். ‘மனம்போல மகிழ்ந்து வாழ / மயக்கும் மதுவையே /மதமாகக் கொண்டார்!’. ஒரு ஆண் தன்னுடைய கடமையை செய்யாத போது அந்த குடும்பத்தின் பெரும்பாரம் அந்த வீட்டின் குடும்ப தலைவி தலைமீது சுமத்தப்படுகிறது என்பதை மிக ஆழமாக அருமையாக பதிவு செய்கிறார். தன் சகோதரி மூலம் தான் மாமனான மகிழ்ச்சியை, ‘அமுதம் போன்றொரு அன்பினை ஈன்றாள் / ஆருயிர் தங்கை அளவிலா மகிழ்ச்சி கொண்டாள் / இன்பம் எங்கள் இல்லத்திற்கீன்ற/ ஈசனுக்கு நன்றி நன்றி!’
உறவுகளை மட்டுமல்ல, இந்த உறவுகளைத் தாங்கிப் பிடித்திருக்கும் தன் மண்ணைப் புகழ்ந்து பாடும் இக்கவிஞர், இரயுமன்துறையை வெகு எழிலாகக் காட்சிப்படுத்துகிறார். ஒரு தாயாக, பெண்ணாகப் பார்க்கிறார். காரணம், மண்ணைப் போல் பெண்ணும் படைப்பின் சக்தி தான் இதை உணர்ந்து கொண்டே இவர், ‘இனியவளே! இரயுமன்துறை தாயே!’ என்று அழைக்கிறார். தன் மண்ணின் இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும்; அழியக்கூடாது என்கிற மிகப்பெரும் நேசம் இவருக்கு இருக்கிறது. அதுபோன்று தன்னுடைய மண்ணின் இயற்கை காட்சிகளைக் கூட கவிதையாக்கித் தருகிறார். இதில் இரயுமன்துறையின் அழகு காட்சிப்படுத்தப்படுகிறது. ‘இனியவளே! இரயுமன்துறைத் தாயே! / இயற்கையின் இளமை நிறைந்தவளே! / இருப்போற்கின்பம் அளிப்பவளே / இறந்தோர் உன்னை இழந்தனரே! என்கிறார். அதேபோன்று, எண் துறையே! என் துறையே! / எண்ணமெல்லாம் இத்துறையே / எழுச்சிபெறக் காத்திருக்கும் / எழிலான துறையிதுவே!’ என தனது கடலோரப் பகுதியை கவிதையாக வடித்துள்ளார். அவருடைய கவிதையை படிக்கிறபோது இரயுமன்துறைக்கு நான் ஏற்கனவே சென்றிருந்தாலும் அதனுடைய அழகை தரிசிக்க இன்னும் பலமுறை போக வேண்டும் என்று என் உள்ளம் அவா கொள்கிறது.
இவருடைய கவிதை நூலில் கடைசி அத்தியாயமாக வருவது காதல். இந்தக் காதல் மனிதர் மீதான காதலையும் பாடுகிறது; தமிழ் மீதான காதலையும் பாடுகிறது. தாய்மொழியை நேசிக்கிற இந்த படைப்பாளி, தாய் மண்ணை வணங்குகிற இந்த படைப்பாளி, தாய் மொழியையும் கடவுளுக்கு இணையாக வைத்து பார்க்கிறார். வாசகர்களுக்கு காதல் குறித்த கவிதை எப்படி ஓர் அருட்பணியாளருக்கு வந்தது என்கிற கேள்வி எழலாம். காதல் யாருக்கும் தனி உடைமை அல்ல; அது பொது உடைமை. காதலைப் பற்றி எழுதுவதற்கு காதலித்து தான் எழுத வேண்டும் என்கிற கட்டாயமும் இல்லை. இயல்பிலேயே எல்லா மனித உயிர்களிடமும் காதல் இருக்கிறது. அது எதிர்பாலினத்தவரோடாகவும் இருக்கலாம்; இயற்கையோடும் இருக்கலாம். காதல் கவிதை இவருக்கு வந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த உலகில் காதலைப் பற்றி சிந்திக்காத மனிதர்கள் கிடையாது. காதலைப் பற்றி எழுதாத கவிஞர்கள் கிடையாது. இந்த அருட்பணையாளரும் காதலை பற்றி ஒரு சில கவிதைகளை இங்கே பதிவு செய்திருக்கிறார். ஆனால் அந்த கவிதைகள் சாதாரணமாக காதலித்து விட்டு எழுதுகிறவர்களை விட ஆழமும் விரிவும் கொண்டதாக அமைந்திருக்கிறது. ‘நிலவு மகள் வான் வழியில் தவழ்ந்து வர / நீர் மகனும் அதைக் காண பொங்கி எழ / உன் வரவை எதிர்நோக்கும் / ஆண்மகனாம் என் நிலையைப் பாராயோ?’ என்று உருகுகிறார். விவிலியத்தில் வருகிற உன்னத சங்கீதத்தை போல் இந்த காதல் கவிதைகள் காலத்தால் அழியாதவைகளாக மாறிவிடுகின்றன.
நிறைவாக தமிழையும் தமிழ் இசையையும் போற்றி புகழ்ந்து கவியுரைத்து நிறைவு செய்கிறார் இந்த கவிஞர். ‘தொன்மையுள்ள தமிழிசைக்கு / தரணியில் நிகர் எதுவுமில்லை / தன்மானம் குறையாமல் / தழைதோங்க பாடுபடு.’ என்கிறார். மனித வாழ்வில் அறம் மிக முக்கியமானது ஒருவன் அறவாழ்க்கை வாழுகிறபோது இந்த உலகத்தில் மனிதர்களை நேசிக்கிறவனாக, சுயமரியாதை கொண்டவனாக, பிறரை மதிப்பவனாக மாறி விடுகிறான். இதையே, ‘தங்கம் போல் தனிச்சிறப்பு அடைய வேண்டும் / தலைநிமிர்ந்து தமிழனாக வாழ வேண்டும் / தகைசான்ற பெரியோரை மதிக்க வேண்டும் / தகாத செயல்களையே தவிர்க்க வேண்டும்! என்று பாடி அறத்தை வலியுறுத்துகிறார்.
இறைபணிக்குள் இருந்து கொண்டு அறப்பணியும், அருட்பணியும் இலக்கியப் பணியும் செய்யும் இவ்வருட்பணியாளரை நெஞ்சார பாராட்டி அணிந்துரைக்கிறேன். வாழ்க இவர் கவி ஆற்றல்! வளர்க இவரது இலக்கியப் பணி!
- குமரி ஆதவன்
(தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருத்தாளர்)
kumariaathavan1970@gmail.com