மனம் – மனிதம் – மதம்
பிற உயிர்களிலிருந்து
மனிதன் வேறுபடுவது மனத்தால்
அதனாலன்றோ நாம் மனிதர் ஆகிறோம்.
மனதின் தன்மை பகுத்தறிவு.
அதை பயன்படுத்தாததால்
மூடநம்பிக்கை/விசுவாசம்,
மதங்கள் வந்தன, வளர்ந்தன...
மனம் இல்லாத நிலையே மதம்!
‘கண்டவர் யாரும் சொன்னதில்லை
சொன்னவர் யாரும் கண்டதில்லை!’
என்றறிந்தும் மூடநம்பிக்கையால்
மதங்களின் ஆதீக்கத்துக்குட்ப்பட்டு
இயேசு தந்த உண்மை சுதந்திரத்தை,
இறைமக்களின் சுதந்திரத்தை,
பறிகொடுத்து பரிதவிக்கின்றோம்...
தாயும் தந்தையுமான
இறைவனின் பிள்ளைகள் நாம்...
இயேசுவின் நண்பர்கள் நாம்
உலகின் ஒளியாம் அவரே
நம்மையும் உலகின் என்றார்...
இத்தகை நம்மை
பாவிகள், பலவீனர்கள் என்றும்
உள்ளத்தை/மனதையேக் கடந்த
கடவுளர்களையும் படைத்து
பூசாரி, சடங்கு, சம்பிரதாய
கட்டுப்பாட்டிற்குள் வைத்து
காரியங்கள் நடத்துவதாகவும் சொல்லி
காசு, காணிக்கை, பலி என
மக்களை சுரண்டுகின்றனர்...
உண்மை உங்களை
சுதந்திரத்திற்கு இட்டுசெல்லும்,
ஆவியிலும் உண்மையிலுமுள்ள
ஆராதனையே இறைவன் ஏற்கும் ஆராதனையென
இயேசுவே சொல்லியிருப்பதை நினைவில் கொள்வோம்.
அம்மையப்பன்
கடவுள் தமது சாயலாகவே
மனிதனைப் படைத்தார்
ஆணும் பெண்ணுமாக
அவர்களை படைத்தார்...
ஆக, கடவுளின் சாயல்,
மனிதத்தின் பூரணம்
ஆணிலும் பெண்ணிலும்
அம்மையப்பனில்...
தாயும் தந்தையுமான அவர்
எமக்கு அம்மையப்பன்
ஆம், லேனம்மா-அருளப்பனான
அம்மையப்பன்...
எமது கண்கண்ட தெய்வமவர்!
இறையரசு...
‘நான் பிரம்மம்’, ‘நான் பரம்பொருள்’
என பிரகதாரண்யக உபநிஷத் (1.௪.1௦)
சொன்னதையே இயேசுவும் சொன்னார்,
என்னை காண்பவன் என் தந்தையையும் காண்கிறான் என்று.
ஆக என்னுள் உறையும் இறையை
எவ்வளவு தொலைவிற்கு, உயரத்திற்கு
ஆக்கவேண்டுமோ அவ்வளவும் ஆக்கி
நம்மை பாவிகள் என்று சொல்லி
அதலபாதாளத்துக்கு தள்ளி
நமக்கிடையே பரிந்து பேச
மதங்களை, பூசாரிகளை திணித்து
சுரண்டும் நிலைக்கு நிவாரணமாக
நிலையான ஒரு சேதியை,
இறையரசின் நற்செய்தியை தந்தார் இயேசு.
அதற்காகவே அபிஷேகம் செய்யப்பட்டு
அவர் அனுப்பப்பட்டார்...
சீடர்களின் கோரிக்கையின் படி
அவர் கற்பித்த செபத்திலும்
இந்த ‘இறையரசு வருக’வென்று
செபிக்க சொல்லி சென்றார்.
மேலும் இறையரசையும் அதன் நீதியையும்
தேடினால் மற்றனைத்தும் கிடைக்குமென்றார்.
நம்மிடையே உள்ள இந்த இறையரசை
அனுபவிக்க நாம் மனம் திரும்பவேண்டும்
நம் மனம் பிறரிடம் திரும்பவேண்டும்
அவர் குறைகளில், வேதனைகளில், தேவைகளில்...
நம்மை நாம் நேசிப்பதுபோல் பிறரையும் நேசிக்கவேண்டும்...
இதுவே இறைவாக்கினர்களின் சட்டத்தின் சாரம்.
No comments:
Post a Comment