சீடத்துவம் - குருத்துவம்
'ஆறாவது நாள், கடவுள் மண்ணால் மனிதனை படைக்க
ஏழாவது நாள், அவன் கடவுளை கல்லால் படைத்தான்!’
என்றான் மலையாளத்து கவிஞன் குஞ்ஞுண்ணி!
மேலும், 'மனிதன் படைத்தான் மதங்களை
மதங்கள் படைத்தன கடவுள்களை
மனிதனும் மதங்களும் கடவுள்களும் சேர்ந்து
மண்ணை பிரித்தன, மனங்களை பிரித்தன'
என்றான் அதே மலையாளத்து வயலார் ராமவர்மா!
நமது கண்ணதாசனும் வியந்து பாடினான்,
'எதனைக் கண்டான் மதங்களை படைத்தான்!' என்று.
இயேசு அழைத்தது சீடர்களை மட்டுமே - பின்
எங்கிருந்து வந்தனர் குருக்கள்!
ஆம், அதுவும் அமைப்பு சார்ந்த
ஆதிக்கம் செலுத்தும் மதங்களின் படைப்பே!
குருக்கள், புரோஹிதர்களாம்...
கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே
பேரம் பேசும் இடைத்தரகர்களாம் இவர்கள்!
'தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன்'
என்று ஏசையா கேட்கும்போது நமக்கேன் இடைத்தரகர்கள்?
இதற்கு மக்களை தகுதி இல்லாதவர்களாக்கி (பாவிகளாக்கி),
அவர்களுக்காக பரிந்து பேச ‘திருநிலைப்படுத்த’ப்படுபவர்களாம்
குருக்கள், பூசாரிகள், புரோஹிதர்கள்...
கடவுளின் உருவில் படைக்கப்பட்ட நமுக்கு
அதைவிட பெரிய தகுதி எது வேண்டும்?
நானே உலகின் ஒளி என்ற இயேசுவே,
நாமும் உலகின் ஒளி என்றார்,
நம்மை நண்பர்கள் என்றார்
அவருடன் சேர்ந்து கடவுளை
தந்தை என அழைக்க சொல்லி
நம்மை சகோதரர்களும் ஆக்கினார்.
அங்ஙனம் நாம் இறைமக்கள் ஆனோம்.
மேலும், என் தந்தை நிறைவுள்ளவராயிருப்பதுபோல்
நீங்களும் நிறைவுள்ளவராயிருங்கள் என்றும்,
உங்கள் கடவுளாகிய நான் தூயவராக இருப்பதுபோல்
நீங்களும் தூயவராக இருங்கள்...
குருத்துவம் பெரிதென்றால்
அந்த குருத்துவத்தையே, அரச குருத்துவமாக்கி
நமக்கும் தருகின்றார் இராயப்பர்...
ஆக, எந்த இடைநிலையும் இன்றி
கடவுளை அழைக்க, அவரது கருணையை பெற
நாமும் தகுதியானவர்களே.
'சாதாரண நாமே பிள்ளைகளுக்கு நல்லவை செய்யும்போது,
கடவுள் எம்மாத்திரம் செய்யமாட்டார்?
நல்லோர் மேலும் தீயோர் மேலும்
தமது சூரியனை உதிக்க செய்து
மழையையும் பெய்ய செய்யும் கடவுள்,
ஆகாயத்து பறவைகளை போற்றி
வயல்வெளிபூக்களை உடுத்தும் கடவுள்
நம்மை மட்டும் மறந்துவிடுவாரா!
ஆக, நாம் செய்யவேண்டியது
வார்த்தை மனுவுருவான இயேசுவின் சீடர் ஆவதே
அங்ஙனம் இறையரசையும் அதன் நீதியையும் தேடுவதே...
No comments:
Post a Comment