ஈ. 12 அமுதாக் கண்ணே
அமுதாக் கண்ணே அழகிய முத்தே
ஆருயிர் தங்கையின் அளவிலா சொத்தே
இன்றைக்கு ஓராண்டு நீ பிறந்து - நன்றி
ஈசனுக்கு பல்லாண்டு உனை நினைந்து.
உளமார வாழ்த்தி நிற்கும் தாயுடனே
ஊரிலில்லா தந்தையும்தான் வாழ்த்துகின்றார்
எல்லோரும் அன்பாக வாழ்த்தும் வேளை - உனை
ஏசுதேவன் கூடவந்து வாழ்த்திடுவார்.
ஐயமில்லை கர்த்தர் உன்னை காப்பாரென்றும்
ஒருமனதாய் பலர் நாங்கள் கேட்பதனால்
ஓவியம்போல் ஒயிலாக விளங்கிடுவாய் - தமிழ் மூதாட்டி
ஒளவைபோல் தமிழ்க் கவிதை புனைந்திடுவாய்.
- 21.03.1985
13. தவிக்கும் குடும்பம்
தவறெல்லாம் தவறாமல் தாங்கிக் கொண்டோம்
துன்பமெல்லாம் துயரின்றி தூக்கிக் கொண்டோம்
இன்பமொன்றும் இதுவரைக்கும் வந்ததில்லை
இனி வருமென்று நம்ப இடம் இப்போதில்லை.
அம்மாவே ஆறுதலாய் ஆதரித்தாள் - ஆனால்
அம்மாவோ ஆறாமால் அமைதியடைந்தாள்
அப்பாவோ அக்கறையின்றி ஆடி நடந்தார்
ஆயிரம் சொல்லியும் அப்படியே நடந்தார்.
தடுமாறும் தம்பி மற்றும்
தனைநம்பும் தங்கையுடன்
தயங்கி நிற்கும் தாய் தந்தை
தங்கி நிற்க நான் மட்டும்.
14. அமுதாவுக்கு அரண்
தங்கை மகள் தங்க மகள்
தாலாட்ட தந்த மகள்
தாயோடு தவழும் மகள்
தந்தை வர தவிக்கும் மகள்.
அமுதென்று பெயர் கொண்டாய்
அதைப் போன்று சுவை தந்தாய்
அழகு மயிலெனவே ஆடி வந்தாய்
அருங்குயில் போல பாட வந்தாய்.
ஈராண்டு நீ பிறந்து முண்டிந்த இன்று
பல்லாண்டு நீ வாழ வாழ்த்தி நின்று
ஈசானண்டை எழும் எங்கள் ஜெபமொன்று
உன்னண்டை அரணாக அமையும் என்றும்.
- 19.03.1986
15. மறுக்கப்பட்ட மலருக்கு
மாதங்கள் பனிரண்டு மடிந்து வீழ
மறுபடி பிறப்பது புத்தாண்டு
மயூரி பிறந்தின்று ஓராண்டு
மாபாரனை வேண்டுகிறேன் பல்லாண்டு.
பெற்றோரின் பெயரோடு ரோஜாவொன்று
பொருந்தாமல் போராடி நிற்க அன்று
பிறந்தாயே கண்ணே நீ மயில் போன்று
நிறைந்தாயே என் மனமெங்கும் இன்று.
மயில்போல ஆடிவந்து நீ - என்
மனமதை மகிழ்வித்தபோது
மாற்றிச்சென்றனர் உன் பெற்றோர்
மனமொன்று இல்லாததைப் போல்.
மறுக்கப்பட்ட மலரானபின்னும்
மனக்கண் முன் நின்று மலர்கின்றாய்
மறக்கமுடியாமல் வாடுகிறேன்
மறுபடியும் உனை நானே தேடுகிறேன் .
- 11.11.1986
No comments:
Post a Comment